Followers

Saturday 21 January 2017

யார் இந்த நரகாசுரன்


முக்கிய கருக்கள்:-
1) மஹாவிஷ்ணுவின் புதல்வன் தான் நரகன் எனப்படும் நரகாசுரன்.
2) தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தை இராஜ்ஜியமாக கொண்டு ஆட்சி புரிந்தவன்.
3) தவறான நட்புறவால் சீரழிந்து, மாய இருளில் சிக்குண்டு அக்கிரமங்கள் புரிந்தவன்.
4) மஹாவிஷ்ணு தம் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை வதம் புரிந்து, அவனுக்கு வீடுபேறு அருளினார்.
5) அவனின் விருப்பப்படி மக்கள் யாவரும் அவனையும் அவன் புரிந்த தீமைகளையும் அதனால் அவனுக்கு நிகழ்ந்த முடிவையும் என்றும் நினைவில் கொண்டிருக்க, ஒவ்வொரு ஆண்டும் ‘நரக சதுர்த்தசி’அனுசரிக்கப்படுகின்றது.


நரகாசுரன் தமிழனா?

திராவி(மூ)டர்கள் நரகாரசுரனை ‘தமிழன்’ என்று பொய்யாக கதை உருவாக்கி, சிறுபான்மையினரிடம் புகழ் பெறுவதற்காக, இந்து சமயம் சார்ந்த எல்லாவற்றையும் எதிர்க்கும் வாடிக்கையாக தீபாவளி பண்டிகையையும் எதிர்த்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லாத ஒரு கோசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் லாபத்திற்காக அவர்கள் புரியும் இச்செயலின் முதல் நோக்கமே, இந்து-சமயத்தை சாராத சிறுபான்மையினர்களைக் கவர்வதற்காக தான். மற்றொரு நோக்கம் இந்தியாவை கூறுபோட்டு, இந்தியர்களின் ஒற்றுமையை குலைத்து, இந்துக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, இந்திய நாட்டை பலவீனமாக்கி, அடிமைப்படுத்துவது.

உண்மையில். புராணக் கதைகளின் படி, நரகாசுரன் என்பவன் விஷ்ணுவின் மகன். பாகவத புராணத்தின் படி, மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் போது, அவரின் புதல்வனாக நரகன் எனப்படும் நரகாசுரன் கூறப்படுகின்றான். இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூபா எனும் இராஜ்ஜியத்தை ஆண்டு வந்தவன். இன்னமும் அஸ்ஸாம் மக்களிடையே நரகாசுரனைப் பற்றிய பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அஸ்ஸாமின் புராண வரலாற்றில் நரகாசுரனைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. அஸ்ஸாம் இலக்கியங்களிலும் நரகாசுரன் அஸ்ஸாமின் சிறந்த அரசனாகவும், பின்னாளில் பேராசையினால் அழிந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.

பாணாசுரன் என்பவனுடன் ஏற்பட்ட நட்புறவால் நரகாசுரன் தீமைகளைச் செய்ய ஆரம்பித்தான். பாணாசுரன் தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சொனித்பூரை (தற்போது தெஸ்பூர்) இராஜ்ஜியமாக கொண்டவன் என கூறப்படுகின்றது. எனவே, பாணாசுரனும் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.

நரகாசுரன் பதவி பேராசையாலும் ஆதிக்க ஆசையாலும் உலகத்தையே ஆள பேரவா கொண்டான். பல இராஜ்ஜியங்களின் மீது போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். பின்னர், சுவர்கலோகங்களின் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்தான். அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக நரகாசுரன் காட்டப்படுகின்றான். அவனை மாய இருளிலிருந்து நீக்கி, கிருஷ்ண பகவான் ஆட்கொள்கின்றார். பகவான் அவனுக்கு மோட்சம் தந்து, அவனின் விருப்பப்படி, அவன் இறையருள் பெற்ற நாள் ‘நரக சதுர்த்தசி’ என்று அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகின்றது. நரகாசுரனைப் போல பெயர், புகழ், பதவி போன்றவற்றின் மீது பேராசை கொண்டு எந்தவொரு மனிதரும் ஆத்மநாசத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த கதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகின்றது.

ஒருவேளை நரகாசுரன் தமிழன் என்றால், அவனின் தந்தையாக காட்டப்படும் மகா விஷ்ணுவும் தமிழர் தானே? ஆகையால், கிருஷ்ணரும் தமிழர் தானே? கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்வது எவ்வகையில் ஆரிய-திராவிட போர் எனப்படுகின்றது? நரகாசுரனை கறுப்புத் தோலுடன் சித்தரிப்பதால், அவன் தமிழன் என சொல்வது முட்டாள்தனம். நரகாசுரனை ‘இருள்’ மற்றும் ‘அறியாமை’ ஆகியவற்றிற்கு உவமையாக காட்டுவதால் அவனை கறுப்பாக காட்டுகின்றனர். இருளின் நிறம் கறுப்பு தான். இருளில் நம்மால் பார்க்க முடியாது. ஆகையால், அறியாமை (பார்க்க முடியாமை)க்கு உவமையாக கறுப்புநிறம் உள்ளது. எனினும் புராணங்களின் படி, நரகாசுரன் கறுப்புத் தோலுடையவன் என்ற எந்தவொரு குறிப்பும் கிடையாது. ஆனால், கிருஷ்ணர் என்ற சொல்லே ‘கறுப்பானவன்’ எனப் பொருள்படும். கிருஷ்ணர் கறுப்புத் தோலுடையவர் என்ற குறிப்புகள் சாஸ்திரங்களில் மிகுதியாக உள்ளன. ‘காக்கையின் சிறகினிலே’ எனும் பாரதியார் பாடல் கூட கிருஷ்ணரை கறுப்பானவர் என்றே கூறுகின்றன.

தமிழர்கள் எல்லோரும் கறுப்புத் தோலுடையவர்களா? தமிழர்கள் பல்வேறு தோல் நிறங்களிலும் காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்களைப் போல ஒட்டுமொத்த தமிழர்களும் கறுப்பர்கள் கிடையாது. அதேபோல தான் எல்லா இந்தியர்களும். வட இந்தியர்களிலும் கறுப்புத் தோல் உடையவர்கள் உள்ளனர். மனிதனின் தோல்நிறம் உணவுப்பழக்கம், சீதோஷ்ண நிலை, புவிவியல் மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் வேறுபடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் கூட ஒரே நிறங்களில் இருப்பதில்லை.

பல்வேறு புராணங்களின் குறிப்புகள் படி, நரகாசுரன் அஸ்ஸாமை ஆண்ட அரசன். அவனுக்கும் தமிழ்நாட்டிற்கும் துளியும் தொடர்பு கிடையாது. நரகாசுரனைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் கிடையாது. ஒரு பொய்யான விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகி விடாது. புராணங்களில் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக கூறப்படும் பல்வேறு அசுரர்களை ‘தமிழர்கள்’ எனக் கூறி, ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டுமிராண்டிகள் என திராவிட அரசியல்வாதிகள் காட்ட முயற்சி செய்கின்றனர். இதன்மூலமாக, ஈ.வே.ராமசாமி கூறியது போல ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்’ என்பதை அவர்கள் நிரூபிக்க கடுமையாக முயல்கின்றனர்.


நரகாசுரன் உண்மையில் வாழ்ந்தானா?

நரகாசுரன் உண்மையாக வாழ்ந்திருந்தால், அதனால் நமக்கு வரப்போவது என்ன? அல்லது அவன் ஒரு கற்பனையானவனாக இருந்தால், அதனால் நாம் இழப்பது என்ன? இவ்வுலகில் பதவி பேராசையாலும் ஆதிக்கத்தாலும் மக்களை அனுதினமும் கொடுமை செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவத்திலும் நரகாசுரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான். மக்களாகிய நாம், கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டு, நரகாசுரனாக இருக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்குவோம்.

பாரதியார் கூறியது போல, புராணக் கதைகள் ஒரு நுட்பமான விஷயத்தை எளிதான முறையில் புரிந்து கொள்வதற்காக சொல்லப்படுபவை. அவை உண்மையா அல்லது பொய்யா என ஆராய்வதை விட, அவற்றிலிருந்து கிடைக்கும் நன்னெறிகளையும் நல்லறிவையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதங்களான உபநிடதங்கள் தான் நித்திய சத்தியமானவை. அவற்றையே நாம் முடிவான ஆதாரமாக கொள்ள வேண்டும்.

‘எல்லா உயிர்களும் சமம்’ என்றே வேதங்கள் பல்முறை பறைசாற்றுகின்றன. எனவே, பிரிவினை எனும் இருளை விலக்கி ‘ஒற்றுமை’ எனும் ஒளியை ஏற்றுவோம்!

No comments:

Post a Comment