Followers

Monday 25 April 2016

சிவன் கணேசரின் தலையைக் கொய்தாரா?

 

புராணக் கதைகள் என்பவை உண்மையில் நடந்தவையாக இருக்கவேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட வேத தத்துவத்தை சுவாரசியமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் விளக்க உருவாக்கப்பட்டவை தான் புராணக் கதைகள். இதனால் தான் புராணங்கள் இந்துதர்மத்தின் இரண்டாம்தர நூல்களாக விளங்குகின்றன.

புராணக் கதை

கணேசர் பார்வதி தேவியின் சக்தியில் தோன்றியவர். ஒருமுறை பார்வதி தேவி தாம் தியானத்தில் ஈடுபட போவதாகவும் உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் கணேசரிடம் கேட்டுக் கொண்டார். தன் தாயின் சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப கணேசரும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரம் சிவபெருமான் வந்திருந்தார். கணேசர் இதுவரை இறைவனை கண்டதில்லை. அறியாமை, ஆணவம், தலைகணம் போன்ற தீய குணங்களோடு இருந்த கணேசர் சிவபெருமானை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்.

பல ரிஷிகளும் முனிவர்களும் கணேசருக்கு நல்லறிவு புகட்டினர். நந்திதேவரும் மற்ற தேவர்களும் கூட கணேசருக்கு உண்மையை எடுத்துக் கூறினர். ஆனால் கணேசர் தாயின் மீது கொண்ட அதிக பற்றாலும் தன்னிடம் இருக்கும் சக்தியின் வலிமையாலும் யாருடைய சொல்லையும் மதிக்கவில்லை. தன் தாய் தந்த சக்தியைக் கொண்டு அனைவரையும் தாக்கினார். இறுதியாக இறைவனே வந்து கணேசருக்கு நல்லறிவைப் புகட்ட முயற்சித்தார். ஆனால் கணேசரின் தலைகணம் அவர் இறைவனை உணர முடியாமல் தடுத்து விட்டது. கணேசர் தன் சக்திகளைக் கொண்டு சிவபெருமானையே தாக்கினார். உலகின் நன்மைக்காக அதீத சக்திகளுடன் தோன்றியவன் உலகையே அழிக்கும் அளவுக்கு மாயையில் சிக்கிக் கொண்டுள்ளான் என்பதை இறைவன் அறிந்தார். எனவே இறைவன் கணேசரின் அறியாமையை அழித்து நல்லறிவைப் புகட்ட முடிவெடுத்தார். தன்னுடைய சூலாயுதத்தால் கணேசரின் அறியாமையாகிய தலையைக் கொய்தார். தியானத்திலிருந்து வந்த பார்வதிதேவி தன் சக்தியால் தோன்றிய கணேசருக்கு மீண்டும் முழுமையான உருவம் தருமாறு சிவபெருமானிடம் வேண்டிகொண்டார்.

முற்காலத்தில் கஜாசுரன் எனும் சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். எப்போதும் சிவனைப் பூஜித்து சிவபெருமானுடனே இருக்கவேண்டும் என அனுதினமும் ஈசனையே எண்ணி வாழ்ந்து வந்தான். இவனின் சிந்தனை முழுவதும் சிவனே என உருகி தூய்மையான நிலையில் இருந்தது. அவனின் கர்மவினைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அவன் ஒரு யானையாக பிறப்பெடுத்தான். கஜாசுரனின் வேண்டுதலுக்கு ஏற்ப அவன் தன்னுடைய தூய சிந்தனையைக் கணேசருக்கு அளித்தான். பார்வதி தேவியின் சக்தியால் தோன்றிய கணேசருக்கு சிவபெருமானின் பக்தனான கஜாசுரனின் தலை (தூய சிந்தனை) பொருத்தப்பட்டது. இதனால் கணேசரும் முழுமையான உருவத்தை பெற்றார். கஜாசுரனும் ஈசனுடன் இருக்கும் பாக்கியத்தை அடைந்தான்.

இது தான் புராணத்தில் வரும் கதை. ஓர் ஆழ்ந்த தத்துவத்தை விளக்க தான் இந்த கதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கதைகளின் மூலமாக சிறுவர்களுக்கும் தர்மத்தை எளிதாகப் புரிய வைத்துவிட தான் இவை எழுதப்பட்டுள்ளன. இப்போது இந்த கதையின் ஆழ்ந்த தத்துவம் என்ன என்பதை ஆராய்வோம்.

புராணத் தத்துவம்

சக்தி என்பவள் அண்டசராசரத்திற்கும் தாயானவள். இயற்கையின் வடிவானவள் சக்தி. அவளின் எல்லையற்ற சக்தியிலிருந்து தோன்றியவர் கணேசர். உலகத்தின் நன்மைக்காகத் தான் கணேசர் தோன்றினார். ஆனால் தன்னிடம் இருக்கும் அதீத சக்தியும் தாய் மீது கொண்ட அளவற்ற பாசமும் கணேசரை மயக்கிவிட்டது. கணேசர் தன் ஆணவத்துக்கும் அறியாமைக்கும் கட்டுப்பட்டு செயல்பட்டார். கணேசரிடம் தாய் தந்த சக்தி இருந்தாலும் அவரிடம் சிவசிந்தனை இல்லாமல் இருந்தது. இறைவனைப் பற்றி அறிந்திராத பாலகனாக அவர் பல சேட்டைகளும் ஆணவ செயல்களும் புரிந்தார். இதனால் கணேசர் தன்னுடைய தோன்றலின் நோக்கத்தையும் மறந்தார். ஆனால் இறைவன் சரியான நேரத்தில் வந்து திருவிளையாடல் காட்டி கணேசரை ஆட்கொண்டார். கணேசரின் ஆணவத்தை நீக்கிவிட்டு, சிவசிந்தனையில் சாத்வீக இயல்போடு இருந்த கஜாசுரனின் தலையைப் பொருத்தினார். இதனால் கணேசர் கஜமுகனாகினார். தாய் தந்த சக்தியும் தந்தையான ஈசன் தந்த ஞானமும் ஒருசேர உலகின் நன்மைக்காக கணேசர் அருள்பாலிக்கிறார்.

கணேசர் சிவ பக்தர் ஆவார். காரிய தடைகள் நீங்க கணேசரை வேண்டிக் கொள்வார்கள். செய்யும் செயல் தூய்மையானதாகவும் சுயநலமற்றதாகவும் இருந்தால் கண்டிப்பாக கணேசர் அச்செயல்களின் தடைகளை நீக்கி அருள்பாலிப்பார். மேலும் ஒருவரின் மனத்தில் இருக்கும் அகங்காரம், ஆணவம், தலைகணம், தான் என்ற தற்பெருமை போன்ற குணங்களை ஈசனருளால் கணேசர் நீக்கிடுவார். எனவே தான் கணேசர் வழிபாடு உலகமெங்கும் புகழ்ப்பெற்று விளங்குகின்றது.

நாம் எப்போதும் சான்றோர்கள் காட்டிய நல்வழியில் பயணித்து அவர்கள் சொன்ன நல்ல அறிவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடம் செல்வம் உள்ளது, செல்வாக்கு உள்ளது என்பதற்காக சான்றோர்களின் பேச்சை மதிக்காமல் இருக்க கூடாது. நாம் சான்றோர்களின் வழிகாட்டல் இல்லாமல் செயல்படுவதால் ஒரு தவறான பாதைக்கே செல்கிறோம். இதனால் நாம் நம்முடைய பிறப்பின் நோக்கத்தையே மறக்கிறோம். தூயசிந்தனையுடைய ஒருவரின் வழிகாட்டல் நமக்கு தேவைபடுகின்றது. அத்தகையவர் நல்லறிவைப் புகட்டும் போது நாம் பணிந்து கேட்க வேண்டும். யார் சொல்லையும் கேட்க மாட்டேன் நான் செய்வது தான் சரி என செயல்படுவது தவறாகும். இது நமக்கு அழிவையே உண்டாக்கும். எந்தவொரு சமயத்திலும் நம்முள் அறியாமை குடியிருக்க நாம் இடம்தர கூடாது. எனவே நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை எல்லாம் நீக்கி நல்லறிவை விதைத்திட கணேசரிடம் வேண்டிகொள்வோம். ஓம் கம் கணபதயே நமஹ. ஓம் நம சிவாய

1 comment: