Followers

Tuesday 5 April 2016

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

- தத்துவம் என்ன?


சனாதன தர்மத்தின் புராணக் கதைகள் பெரும்பாலும் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களையும் நன்னெறி பண்புகளையும் நமக்கு எளிதாக எடுத்துரைப்பதற்காக அருளப்பட்டவை. அந்த வகையில் “பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்” எனும் புராணக் கதை அரசு தர்மத்தை உணர்த்துகின்றது.




அரசு தர்மம்

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை, ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர் முதற்கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலைவராக இருப்பவர் வரை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் தவிர்க்கவேண்டிய செயல்கள் ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் தலைவன் ஆற்றவேண்டிய கடமைகள் அர்த்தசாஸ்திர நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அதிலொரு முக்கிய கடமையை தான் ஈஸ்வரன் இப்புராண கதையின் மூலமாக நமக்கு விளக்குகின்றார்.

புராணம்

மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய பாண்டிய மன்னன் அந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் உதவிக்கரம் தந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அவ்வூரில் அம்மை என்ற வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தார். மூப்பெய்திய காலத்திலும் ஈசன் மீது கொண்ட பக்தி சற்றும் குறையாமல் அனுதினமும் ஈசனை வழிபட்டு வந்தார். சிவத்தொண்டு ஆற்றவேண்டி அந்த மூதாட்டி தன் ஊரில் புட்டுக்களை விற்று வாழ்ந்து வந்தார். பாண்டிய மன்னனின் ஆணையைக் கேள்விபட்ட மூதாட்டி,

“மன்னனின் ஆணையை நிறைவேற்ற என்னிடம் உடல்பலம் இல்லை. அணையை அடைக்க உதவிக்கரம் கொடுக்க ஈசனின்றி எனக்கென்று வேறு யாரும் இல்லையே” என மிகவும் வருத்தப்பட்டார்.

தம்மிடம் சரணடைந்த பக்தையின் வருத்தத்தைக் கண்டுகொண்ட சிவபெருமான் தாமே கூலி ஆளாக தோன்றினார். அப்போது அம்மையாரிடம் விளையாட வேண்டி ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.

“அம்மையே, உம் சார்பாக நான் மண் சுமக்கிறேன். அதற்கு கூலியாக நீர் தயாரித்த புட்டுகளை எமக்கு கொடுப்பாயா?” என கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் கேட்டார்.

அம்மையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். தெய்வீக புன்னகை மலர புட்டுகளை உண்டுவிட்டு மண் சுமக்க புறப்பட்டார்.

இப்போது மன்னனுக்கு பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் மற்றொரு திருவிளையாடலும் மேற்கொண்டார். மன்னன் கூலியாட்களிடம் மிகவும் கடுமையாகவும் அவர்களை அடிமையாகவும் நடத்தி வந்தான். கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் களைப்பு மிகுதியால் வேலையை நிறுத்திவிட்டு உறங்குவதைப் போல பாசாங்கு செய்தார். இதைக் கண்ட மன்னன் கடும் கோபம் கொண்டான். சற்றும் சிந்திக்காமல் கோபத்தால் கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமானை பிரம்பால் அடித்தான்.

அப்போது மன்னனுக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. கூலியாளின் மீது பட்ட ஒவ்வொரு அடியும் உண்மையில் மன்னனின் மீதே பட்டன. வியப்படைந்த மன்னன் கூலியாளாக தோன்றி திருவிளையாடல் புரிந்தது இறைவன் என்பதை உணர்ந்தான். கோபத்தால் சிந்தனையை இழந்து தான் செய்த செயலையும் கூலியாட்களிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் எண்ணி மிகவும் வருந்தினான். இறைவனை வேண்டி தன் தவற்றை திருத்திக் கொண்டான்.

இறைவன் அம்மையாரை வாழ்த்திவிட்டு, மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளினார்.

நன்னெறி

வேலையாட்களை அடிமையாக நடத்தும் முதலாளிகளுக்கு இறைவன் ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளார். தன்னுடைய வேலையாட்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளவேண்டியது முதலாளிகளின் தர்மமாகும். அவர்களை அடிமை போல் நடத்தினால் அது தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். காரணம் முதலாளிக்காக தான் வேலையாட்கள் தங்களின் உடல்பலத்தை செலவிட்டு உழைக்கிறார்கள். முதலாளியிடம் கருணை இருந்தால் தான் தொழிலாளிகளிடம் விசுவாசம் இருக்கும். அதுபோல, ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால், இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையும் இந்த புராணம் எடுத்துக் காட்டுகின்றது.

இப்போது இருக்கும் சூழலில் இந்த புராணம் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

“மக்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. அவர்களை அடிமைப்படுத்துவதும் அவர்கள் வயிற்றில் அடிப்பதும், தர்மநியதிக்கு எதிரான செயலாகும்.” (அர்த்தசாஸ்திரம்)

இதுபோன்ற கதைகளில் அடங்கியிருக்கும் தத்துவங்களை நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதுவே புராணங்களின் அடிப்படை நோக்கமாகும்.

No comments:

Post a Comment