Followers

Tuesday 26 April 2016

மூன்று வகை துன்பம்



ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து மீள வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் முதல்வரியில் கூறுகின்றது. அந்த மூவகை துன்பங்கள்:

1) அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)

2) அதிபௌதீகம் (பௌதீக/உலகப் பொருட்களால் ஏற்படுவது)

3) அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)


|| அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை. எனவே இயற்கையால் ஏற்படும் கிலேசங்கள் அதிதைவீக துன்பம் எனப்படுகின்றன. வெள்ளம், புயல், நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இந்த துன்பங்களை தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது. இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு முன்னர் கணித்து கூறும் திறமை நம்மிடம் இருந்தாலும் அதை தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. இத்தகைய கிலேசங்கள் அரிதானது, தடுக்க முடியாதது ஆனால் இவற்றினிருந்து தப்பிக்க வழி உண்டு.

|| அதிபௌதீகம் என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். உலகத்தின் பொருட்கள் என்பவை: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் ஆகியவை ஆகும். உதாரணமாக: ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல். பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விஷசெடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை. இத்தகைய கிலேசங்கள் வழக்கமானது ஆனால் அவற்றை தவிர்க்கும் ஆற்றலும் திறமையும் நமக்கு உள்ளது.

|| அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். மூன்று வகை துன்பங்களில் இதுவே மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகின்றது. இந்த வகையான துன்பத்திற்கு நாம் தான் முழு பொறுப்பு. நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

க) உடலால் – புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல், ஒழுக்கமற்ற நடத்தையைக் கொண்டிருத்தல் போன்ற செயல்களால் நம் உடலை நாமே துன்புறுத்திக் கொள்கிறோம் 
உ) மனத்தால் – தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், பேராசை போன்ற மனத்திற்கு நோயைத் தரும் குணங்களைக் கொண்டிருத்தல்

தீர்வுகள்

பதஞ்சலி முனிவர் தம் யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார். துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் (அதியாத்மிகம்) என பதஞ்சலி கூறுகின்றார். எனினும், எதிர்காலத்தின் (அதியாத்மிக) துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார்.

அதியாத்மிக கிலேசங்கள் முழுக்க முழுக்க நம் பொறுப்பில் நிலைபெற்றுள்ளன. நம்மை நாமே உடலாலும் மனத்தாலும் துன்பப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, உடலையும் மனதையும் துன்பப்படுத்தி கொள்ளும்படியானவற்றை நாம் தவிர்த்து விடுவதால் மூன்று துன்பங்களில் மிக ஆபத்தான ஒரு துன்பத்திலிருந்து நாம் எளிதில் விடுபடலாம்.

முறையான ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக ஒருவர் இம்மூன்று துன்பங்களிலிருந்து மீளலாம். வழிபாடு, தியானம், தவம், தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது. அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் ஷாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!

No comments:

Post a Comment